ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நகர்ப்புற பகுதிகளிலும், ஊரக பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ரூ1000 கோடியில் ‘அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், ‘எல்லார்க்கும் எல்லாம்’– என்ற உன்னதமான நோக்கம் கொண்ட திராவிட மாடல் அரசாக தமது அரசு செயல்பட்டு வருகிறது என்றும் அனைத்து வளர்ச்சியும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அமைய வேண்டும் என்பதே இந்த அரசினுடைய நோக்கம், லட்சியம், பாதை என்றும் கூறினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுடைய வாழ்க்கை தரம் உயர தனி அக்கறை செலுத்தி திட்டங்கள் தீட்டி வருவதாகக் கூறிய முதலமைச்சர்,
ஆதிதிராவிட மக்கள் கல்வி சார்ந்த திட்டங்களுக்காக ரூ2,206 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,
முனைவர் பட்டப்படிப்பிற்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 2,954 மாணவர்களுக்கு, தலா ரூ1 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.