எம்.பி. பதவியிலிருந்து ராகுல் தகுதி நீக்கம்!
மோடி பெயர் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சூரத் நீதிமன்றம் விசாரணை நடத்தி நேற்று இந்த வழக்கில் தீர்ப்பை வெளியிட்டது.
ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி அறிவித்தார். இதையடுத்து ராகுல் எம்.பி. பதவி தொடர்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்தனர்.
எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்கள் குற்ற வழக்குகளில் 2 அல்லது 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் அவர்களது பதவியைப் பறிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இடம் உள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ல் பிரிவு 8 (3)-ன்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக பதவி இழப்பார்கள் என்று வகுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவை உறுப்பினர் பதவியை பறித்து மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.