இந்தியா மனிதநேயத்தை முதன்மையாகக் கொண்ட நாடு!
பிரதமர் மோடி பெருமிதம்
துருக்கி, சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் அந்நாடுகளுக்கு உதவும் வகையில், இந்தியாவிலிருந்து தேசிய மீட்புப் படையைச் சேர்ந்த 250 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர்.
தற்போது மீட்புப் பணிகளை முடித்து வீரர்கள் அனைவரும் சொந்த நாடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், “உலகின் எந்த நாடு இயற்கைப் பேரிடரால் நிலைகுலைந்தாலும், முதலில் உதவிக்கரம் நீட்டும் நாடாக இந்தியா உள்ளது.
நேபாள நிலநடுக்கம், இலங்கை பொருளாதாரப் பிரச்னை என எதுவாக இருந்தாலும் உதவுவதற்கு இந்தியா முதன்மையாக முன்வந்தது.
இதனால், இந்திய மீட்புப் படையினர் மீது மற்ற நாடுகளின் மதிப்பு உயர்ந்துள்ளது” என பெருமையோடுப் பாராட்டினார்.