போகிப் பண்டிகைக்கு எதையும் எரிக்க வேண்டாம்!
பெருநகர சென்னை மாநகராட்சி கோரிக்கை
போகிப் பண்டிகையையையொட்டி, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 13.01.2023 மற்றும் 14.01.2023 ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர், ரப்பர் ட்யூப் மற்றும் நெகிழி ஆகியவற்றை எரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மக்கள் தங்களிடையே உள்ள தேவையில்லாத பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து, அவற்றைத் தனியாக மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் நாளை முதல் ஒப்படைக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த, பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களில் ஆடியோ மூலம் விழிப்புணர்வு விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.