உள்ளாட்சி தேர்தல்: 2 ம் கட்ட வாக்குப் பதிவு தீவிரம்!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய, ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு, 6ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்தது.
இதைதொடர்ந்து, இரண்டாம் கட்டமாக 60 மாவட்ட கவுன்சிலர், 621 ஒன்றியக் கவுன்சிலர், 1,202 ஊராட்சித் தலைவர், 7,453 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.
அதன்படி இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், ஒன்பது மாவட்டங்களில் இன்று காலை 7 மணியளவில் துவங்கியது.
இதுமட்டுமின்றி, 28 மாவட்டங்களில் காலியாக உள்ள, 13 மாவட்டக் கவுன்சிலர், 40 ஒன்றிய கவுன்சிலர், 86 ஊராட்சித் தலைவர், 279 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தலும் நடக்கிறது.
காலை – 7 முதல் மாலை – 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இத்தேர்தலில் 34 லட்சத்து 66 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் பாதுகாப்புப் பணியில் 16 ஆயிரம் காவல் துறையினரும் 2,867 ஊர்காவல் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.